Dec 11, 2013

சரித்திர நாவல்: வானவல்லி -2

முன்பொருநாள் சாரங்கலன்1 என்னும் சிறுவன் தன்னந் தனியாக சுடுகாட்டிற்குச் சென்றுவிட்டான். அங்கொரு பேய்மகள் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் தலையை தின்றுகொண்டு எலும்புகளை கையிலேந்தி இரத்தம் சொட்ட சொட்ட கூத்தாடிக் கொண்டிருந்தாள். இதனைக் கண்ட சிறுவன் இரத்தம் உறைய நடுநடுங்கி, பயந்து ஓடிவந்து தாய் கோதைமையிடம் கூறிவிட்டு நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் தாய் கோதைமை அவனை மார்போடு அனைத்து அச்சம் விலகும்படி ஆறுதல் படுத்த முயன்றாள், இருப்பினும் அவனது பயம் விலகியபாடில்லை.
உடனே அவள் அடுப்பை மூட்டி எரிந்து கொண்டிருந்த கொள்ளிக் கட்டையை தண்ணீரில் நனைத்தால் எழும் சத்தமும், புகையும் அவனது பயத்தை போக்கும் என்று முயற்சி செய்தாள். அப்படி முயன்றும் பயத்திலிருந்து விடுபடாமல் அந்த சார்ங்கலன் சிறுவன் பயத்துடன் இறந்து போனான். 

உடனே கோதைமை இறந்த தன் மகனது உடலை தோலில் போட்டுக்கொண்டு அருகிலுள்ள சம்பாவதி கோயிலுக்கு வந்து, அவனை உயிர்ப்பித்துக் கொடுக்கும்படி அம்மனிடம் வேண்டி அழுது கொண்டிருந்தாள். 

அவளது வேண்டுதலையும், துயரத்தையும் கண்ட சம்பாபதி அம்மன் அவள் முன் தோன்றி, உன் மகன் விதிவசத்தால் தான் இறந்தான், மாறாக அவன் பேயினால் கொல்லப்படவில்லை. அவனது ஆயுளே அவ்வளவு தான். என்னால் அவனை உயிர்ப்பிக்க இயலாது என்று கூறியது. 

இதனைக் கேட்ட கோதைமை மனம் வருந்தி, தெய்வங்கள் என்றால் கேட்ட வரத்தை அளிக்கும் ஆற்றல் உடையது தானே? நீ இவனது உயிரை திரும்ப அளிக்க இயலாது என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அத்தகைய ஆற்றல் உனக்கு இல்லாதது ஏன்? உன்னை நம்பியே வந்த என் நிலைமை என்னாவது? என வினவினாள். 

தரைக் காவல் தெய்வமான எனக்கு தரையில் துன்பப்படுபவர்களைக் காக்கும் அளவிற்குத்தான் ஆற்றல் உள்ளது. இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் வல்லமை எனக்கு இல்லை என்றது சம்பாபதி அம்மன். 

இதனைக் கேட்ட கோதைமை, மகனை மீண்டும் உயிரோடு காண இயலாததை எண்ணி மனம் நொந்து கதறி அழுதாள். இவளது துயரைக் கண்ட சம்பாபதி அம்மன் தனது தெய்வ ஆற்றலினால் நாட்டிலுள்ள அனைத்து தெய்வங்களையும் அவள் முன் தோன்றச் செய்தது. 

சம்பாபதி அம்மன், இந்தக் கடவுள்கள் யாருக்கேனும் இறந்தவரை உயிர்பிக்கும் ஆற்றல் வாய்த்திருந்தால் எனக்கும் அத்தகைய ஆற்றல் இருந்திருக்கும் என்றது. 

கடல் தெய்வமான மணிமேகலை, எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன் கூட்டியே கூறும் கந்திற் பாவை, சாதுர் மகாராஜிகர்களான2 கந்தர்வங்களின் அரசனும் கிழக்குத் திசைத் தெய்வமான திருதராஷ்டிரன், கும்பாண்டவர்களின் அரசனும் தெற்குத் திசைத் தெய்வமான விரூதாட்சன், இயக்கர்களுக்கு அரசனும் மேற்குத் திசைத் தெய்வமான விரூளாட்சன், நாகர்களுக்கு அரசனும் வடக்குத் திசைத் தெய்வமான வைசிரவணன், இவர்கள் அனைவருக்கும் தலைவனான சக்கன் என்னும் விண்ணுலக அரசனான இந்திரன் என அனைவரும் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வலிமை எங்களுக்கு இல்லை என்று கூறினர். 

இந்திரனோ எங்களுக்குத் தலைவரான போதி சத்துவர் அவலோகிதரால்3 இறந்தவர்களுக்கு உயிர் அளிக்கும் வல்லமை அவருக்கு இருக்கலாம், ஆனால் அவர் எங்களுக்கு அப்பாற்ப்பட்டவர் என்று கூறி மறைந்துவிட்டான். 

நாவலந்தீவு4 முழுமைக்கும் நான் தான் காவல் காக்கிறேன். இமய மலையிலிருந்து இங்கு நான் வந்த பின் நாவல் மரத்தின் கீழ் தவமிருந்துகொண்டே அரக்கர்களால் மக்களுக்கு எந்தத் துன்பமும் ஏற்ப்படா வண்ணம் நான் காவல் காத்துக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் உன் மகன் இறந்தது விதி வசத்தால் மட்டுமே. பேயினால் துன்பம் ஏற்ப்பட்டிருந்தால் நான் நிச்சயம் அங்கு சார்ங்கலனைக் காத்திருப்பேன் என்றது சம்பாபதி அம்மன். 

இதனைக் கேட்ட கோதைமை மனம் தெளிந்து இறந்த தன் மகனை சுடலையில் அடக்கம் செய்துவிட்டுச் சென்றுவிட்டாள். 

பின்பு சம்பாபதி அம்மனும் மக்களுக்கு எத்தகைய துன்பமும் ஏற்படாமல் இருக்க தன்னைப் படைத்த புத்த பகவானை நோக்கித் தவமிருக்கச் சென்றுவிட்டது. 

இத்தகைய நாவலந் தீவின் தரைக்காவல் தெய்வமான சம்பாபதி அம்மனைத் தான் ஆவூரிலிருந்து புகார் நோக்கி இரவில் வந்து கொண்டிருக்கும் பெருவணிகன் வேளாதனின் மகளான பத்திரையும் அவளது தோழியுமான வானவல்லியும் புறப்படுமுன் புகார் நகரை அடையும் வரை தங்களுக்கு எந்தத் துன்பமும் ஏற்ப்படா வண்ணம் தாங்கள் தான் காவல் காக்கும்படி இருவரும் விளக்கு வைத்து வேண்டிக் கொண்டனர். 

வழிப் போக்கர்களும், பயணிகளும் ஓய்வெடுக்கும் அறஞ் சாவடியின் தலைவர் ஈழவாவிரயன்பத்திரையிடம் தாங்கள் இரவு இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள், உங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன். இரவு தங்கிவிட்டு விடியற்காலையில் தாங்கள் புறப்பட்டுச் செல்லலாம், அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் நானே முன்னின்று செய்து தருகிறேன் என்றார். 

சாவடித் தலைவர் ஈழவாவிரயன் தங்கள் தந்தையார் வேளாதனும்6 நானும் வாலிபத்து நண்பர்கள். நாங்கள் இருவருமே பொருளீட்ட பல தூரத்துத் தேசங்களுக்குச் செல்வோம். வாணிபத்தில் ஈட்டிய பொருள்களில் அவர் தானமாக7 வழங்கிய நிதியில் தான் இந்தச் சாவடி உட்பட பல அரக்கோட்டங்கள் தடையற்று இயங்குகிறது. ஆக அவர் மகள் தாங்கள் இந்த இரவு நேரத்தில் தனியாக இந்த அடர்ந்த வனத்தின் வழியாக செல்வது என் மனத்திற்கு சரியென்று படவில்லை. ஆதலால் தாங்கள் இன்றிரவு இங்கேயே தங்கிவிட்டு காலையில் செல்ல வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். 

பழுத்து நரைத்திருந்த தலை முடிகள் தான் அவரது வயோதிகத்தைக் கூற முயன்றதே தவிர மற்றபடி அவரது உடலில் தளர்வோ முகத்தில் சுருக்கங்களோ இல்லை. அவரது உடலுக்கும் தலைமுடியின் நரைப்பிற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. அவரது கூர்மையான பார்வை, முகத்தில் தோன்றிய ஒளி யாரையும் கட்டுப்பட வைக்கும்படியாய்த் தோன்றியது பத்திரைக்கு. தனது தந்தையுடன் இந்த ஈழவாவிரயரை பல முறை பத்திரை சந்தித்துள்ளதாலும், அவரைப் பற்றி பத்திரைக்கு நன்கு  பரீட்சயமாகியிருந்ததாலும் அவரது வேண்டுகோளை பத்திரையால் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட இயலவில்லை. 

சாவடித் தலைவர் ஈழவாவிரயரிடம், தங்கள் வேண்டுகோளை ஏற்க இயலாமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன். உங்கள் உதவிகள் அனைத்திற்கும் மிகுந்த நன்றி அய்யா. இருப்பினும் நான் இன்றிரவு தந்தைக்கு புகார் வருவதாக ஏற்கெனவே செய்தி அனுப்பி விட்டேன். ஆகவே இன்றிரவு எங்களால் இங்கு தங்க இயலாது. கட்டாயம் நாங்கள் கிளம்பியாக வேண்டும். தங்கள் பேச்சை மறுப்பதற்கு மன்னித்தருள வேண்டும் என்றாள். 

அனைவரும் புகார் நகரத்திற்கு முன் உள்ள அடர்ந்த வனப் பகுதியான சம்பாபதி வனத்தை நோக்கி அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கவிருந்தனர்.

இருவரும் தங்களுக்குத் தயாராய் இருந்த வண்ணம் தீட்டிய அழகிய புரவித் தேரில் ஏறிக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் காவலாக வேளாதனின் நம்பிக்கைக்குரிய காவலர்கள் சிலரும் அவர்களுடன் புறப்பட்டனர்.

பிறகு, சாவடித் தலைவர் பத்திரைத் தேவியிடம் கள்வர்களின் தொல்லைகள் காட்டில் இந்தப் பின்னிரவில் அதிகம் இருக்குமென்றும் அவர்களின் தலைவன் காளன் இரவுப் பயணிகளிடம் அவனது தொல்லைகள் அதிகரித்துள்ளதாகவும், பயணிகளுக்கு அவன் இழைக்கும் கொடுமைகள் அதிகம் என்று கூறி மேலும் சில வீரர்களை அவர்களுக்குத் துணையாக அவர்களுடன் செல்லும்படி கட்டளையிட்டார். 

கடும் கொடுமைக் காரனான காளனின் பெயரைக் கேட்டதும் புரவித் தேரில் அமர்ந்திருந்த புகார் நகர சிற்பங்களை விட அழகு வாய்ந்த வானவல்லிக்கு எச்சரிக்கை உணர்வையும் பத்திரைத் தேவிக்கு சிறு பயத்தையும் அளித்தது. 

இருப்பினும் வானவல்லியின் துணையினாலும், அவள் இருக்கும் வரை ஏதும் தனக்கு நேராது என்ற துணிவினால் புரவிகளை விரைந்து செலுத்தும்படி கட்டளையிட்டாள் பத்திரைத் தேவி. 

தொடரும்...

1.வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற 

சம்பு என்பாள் சம்பா பதியினள்- மணிமேகலை- பதிகம் 1-8. 

இப்பாடலில் இக்கதை வருகிறது. காவிரி ஆறு தோன்றுமுன் புகார் நகரத்திற்குப் பெயர் சம்பாபதி. காவிரி புகுமுன்னே புகார் நகரம் சம்பாபதி என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கியது. ஆதாரம் சிலப்பதிகாரம்- புகார் காண்டம் .

2.சாதுர் மகாராஜிகர்கள்- நான்கு திசைக்கடவுல்களுக்கும் உள்ள பொதுப் பெயர். இவை புத்த மத தெய்வங்கள். 

3.அவலோகிதர்- இவர்தான் புத்த பகவானாக அவதாரம் எடுத்தார் என்றும், இவர்தான் அகத்திய முனிவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார் என்பதும் பௌத்தர்கள் நம்பிக்கை. அனைத்து கடவுளர்களிற்கும் மேம்பட்டவர் மேம்பட்டவர், புத்தருக்கு கீழ்ப்பட்டவர். 

4.நாவலந்தீவு- பண்டைய பாரத தேசத்திற்கு நாவந்தீவு என்பது தான் பெயர். சம்பாபதி தெய்வமானது நாவல் மரத்தின் கீழ் பாரத துணைக்கண்டம் முழுதும் காவல் காக்க தவமிருந்தமையால் இத்தகைய பெயர் வழங்கப்பெற்றது. இன்று ஊரின் வெளிப்புறங்களில் நாம் காவல் தெய்வங்களாக   காளி, பிடாரி  அம்மன் என  வணங்குவது இந்த சம்பாபதி அம்மனைத்தான்.

5.ஈழவாவிரயன்- தாமிழி அல்லது தமிழி என வழங்கப்படும் பண்டையகால பிராமி கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள பெயர். 

6.வேளாதன்- சங்ககால தமிழி புகழூர் கல்வெட்டுகளில் வறியவர்களுக்காக உதவி செய்வதற்காகவே வாணிபம் செய்த வணிகன் பற்றிக் கூறுகிறது. 

7.பண்டைக்கால செல்வந்தர்கள் அன்னச்சாவடிகளுக்கும், பயணியர் கோட்டங்களுக்கும் நிதி உதவி செய்தனர். ஆதாரம் புகழூர் கல்வெட்டு.

சரித்திர நாவல்: வானவல்லி-1

நன்பர்கள் அணைவருக்கும் வணக்கம். இனி வரும் ஒவ்வொரு புதனன்றும் வானவல்லி என்ற சரித்திர நாவல் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துப் பிழை, சொற்பிழை ஏதேனும் காணப்பட்டால் சுட்டிக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

42 comments:

  1. அருமையான கதை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தங்கள் வருகைக்கும் இனிய பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. தம்பி, சம்பவங்கள் கற்பனை கதை போலல்லாமல் ரொம்ப இயல்பாக முன்பு எப்போதோ நடப்பது போல் உள்ளது. அருமையாக எழுத்து வசப்பட்டிருக்கிறது.. தொடர்ந்து எழுது.. தொடர்ந்து வருகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...

      Delete
  3. கொடுத்துள்ள விளக்கம் உட்பட அனைத்தும் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...

      Delete
  4. வணக்கம்
    தம்பி.

    அருமையாக உள்ளது..தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அண்ணா...

      Delete
  5. சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி...

      Delete
  6. இனிய வணக்கம் தம்பி....
    சிறுவன் சாரங்கலன் அவனது தாய் கோதைமை...
    பாத்திரப் படைப்பும் கதையும் அருமை.
    பிறப்பு என்று ஒன்று வந்தால் இறப்பு என்பது
    நிச்சயம், என்ன செய்தேனும் தனது குழந்தையை
    காப்பாற்றத் துடிப்பாள் தாய் என்று மீண்டும் மீண்டும்
    நிரூபனமாக்கும் இன்னுமொரு கதையைச் சொல்லியிருக்கிறீர்கள்.
    மணிமேகலை காப்பியத்திலிருந்து இதற்கான ஆதாரத்தை
    காண்பித்திருப்பது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் அண்ணா...

      தங்களது கடினமான வேலைகளுக்கிடையில், கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரத்தில் தாங்கள் படித்து கருத்தளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியும், புது ஊக்கத்தையும் அளிக்கிறது... நன்றி அண்ணா...

      Delete
  7. ஈழவாவிரயர் பற்றிய அறிமுகம் நன்று. இதுபோன்று தோற்றம் பற்றிய
    விளக்கம் கதையின் வாசிப்பிற்கு ஏதுவாக இருக்கும். இதையே தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன் அண்ணா... பாராட்டு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...

      Delete
  8. கள்வர்கள் தலைவனின் பெயர் "காலன்" அல்லது "காளன்" இதில் எந்தப் பெயர்
    என்று தெளிவாக குறிப்பிடுங்கள்.
    இந்தக் கள்வர்களின் தலைவன் பாத்திரம் பின்வரும் பாகங்களில்
    தவிர்க்கமுடியாத பாத்திரம் ஆகப்போகிறது என்றே தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. காளன் என்பதுதான் சரியான பெயர். மற்றது சொற்பிழை. பிழையை சரி செய்து விட்டேன் அண்ணா...

      தங்கள் கணிப்பு சரிதான். வரும் கதைகளில் அவனது பாத்திரம் முக்கியமானது.... பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி அண்ணா...

      Delete
  9. ஒரு சிறிய பிழை திருத்தம்.. எந்த சொல்லிலும் "ற்" என்ற எழுத்துக்குப் பின்னர்
    இன்னொரு மெய்யெழுத்து இணையாது .. அப்படிப்பட்ட சொற்பிழைகளை
    திருத்தி விடுங்கள்.
    அன்னச்சாவடி என்றுதான் வரவேண்டும். அண்ணச்சாவடி அல்ல.

    ReplyDelete
    Replies
    1. பிழைகளை சரி செய்துவிட்டேன்... இலக்கணத்தை தெரியப் படுத்தியமைக்கு நன்றி அண்ணா...

      Delete
  10. குறிப்பு 6 என்று நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வேளாதண் என்ற பிழையைத்
    திருத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. திருத்திவிட்டேன் அண்ணா...

      Delete
  11. குறிப்பு 7 ல் பயனியர் என்பது பயணியர் என்று வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சரி செய்து விட்டேன் அண்ணா...

      Delete
  12. ஈழவாவிரயன் அறிமுகத்துக்கு முந்தைய வாக்கியத்தில் வானவல்லியும் என்றும்
    வண்ணம் என்றும் பிழைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. திருத்திவிட்டேன் அண்ணா

      Delete

  13. தொடருங்கள் தம்பி. அருமையாக அமைந்திருக்கிறது .கதை வடிவம்.
    ஆயினும் கொஞ்சம் நேரம் எடுத்து எழுத்துப் பிழைகளை முடிந்தவரை
    சரி செய்யுங்கள். சுட்டிக்காட்டி திருத்துவது ஏதேனும் ஓரிரண்டு இருந்தால்
    பரவாயில்லை. அதிகமாக இல்லாது பார்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தவறுகள் அனைத்தையும் சுட்டிக் காட்டி எனது தவறை தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா...

      வரும் பதிவுகளில் பிழை ஏற்படாவண்ணம் முயற்சி செய்கிறேன் அண்ணா... தொடர்ந்து படித்து பிழைகளை சுட்டிக்காட்டி எனை செம்மைப் படுத்த உதவுங்கள் அண்ணா... நன்றி வணக்கம்....

      பதிவை பொருமையாகப் படித்து, நிறை குறைகளை தெரிவித்துள்ளதற்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  14. Anonymous8:14:00 PM

    சகோதரா மின்னஞசலில் சில திருத்தங்கள் போட்டுள்ளேன் பார்க்கவும்.
    மிக மிக அருமை. முயற்சி தொடரட்டும்.
    அன்பு வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வேதாம்மா...

      தாங்கள் கூறிய பிழைகள் அனைத்தையும் சரி செய்துவிட்டேன்...

      நன்றி....

      Delete
  15. மிகவும் அருமை நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு சரித்திர நாவல் படிக்கும் மகிழ்ச்சி தொடருங்கள் வெற்றி

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன் அண்ணா...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  16. தம்பி அருமையாக கதை சொல்கின்றாய். இயல்பான எழுத்து நடை சிறப்பு. வாழ்த்துக்கள். வருகைக்கு பிந்திவிட்டது மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுகளுக்கு மிகுந்த நன்றி அண்ணா...

      பிந்தினால் என்ன அண்ணா? தங்கள் வருகையே மகிழ்ச்சி அளிக்கிறது...

      Delete
  17. கதை அருமையாகச் செல்கிறது. கூடவே புரிந்து கொள்ள விளக்கங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி சகோதரி...

      Delete
  18. தொடர்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி... தொடருங்கள்...

      Delete
  19. முதலும், இரண்டும் எவ்வித சலிப்பையும் தராமல் அடுத்து என்ன ? என்று எதிர்நோக்க வைக்கிறது அது தான் வெற்றி ,,,,

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தங்கள் பாராட்டுகளுக்கும், இனிய கருத்துக்கும் நன்றி அண்ணா... தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துகளைக் கூறுங்கள்..

      நன்றி...

      Delete
  20. பல காரணங்களால் இணையம் வரமுடியாமல் இன்றுதான் உங்கள் பதிவைப் படிக்கிறேன்..நன்றாக இருக்கிறது கதையும் நீங்கள் எழுதும் விதமும். விளக்கங்களும் அருமை. அடுத்தப் பகுதிகளையும் படிக்கப் போகிறேன். வாழ்த்துகள் வெற்றிவேல்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி...

      பாராட்டியமைக்கும் மிக்க நன்றி...

      தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துகளை குறிப்பிடுங்கள்... நன்றி...

      Delete
  21. Arumai. sirapaga ullathu

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...