Dec 20, 2012

என் விடியல்



மார்கழிப் பொழுதின்
மயக்கும் காலை.
வங்கக் கடலின் ஈரம் சேர்த்த 
மாயக் குளிர் காற்று.

ஊடலுடன் காதோடு காதாய் 
ரகசியம் 
பேசும் குருவிகள். தவழ்ந்து 
வரும் குளிர் காற்றோ 
பனியைத் தழுவியபடி 
ஈர இலைகளுடன் நடனமாட...

நீயிடும் புள்ளிக் கோலத்தில் 
தொலையத் 
தொடங்கும் நட்சத்திரங்கள்...

கனவுகள் நனவாகாதா என்ற நிலை
சென்று, நடந்தவை அனைத்தும் 
கனவாகாதா என்ற நிலையில்
ஏங்கித் தவிக்கும் மனம்...

நீ இல்லாத வானில்
பார்வையிழந்த நான் இங்கு 
தனியாக காத்திருக்கிறேன்
விடியப் 
போகும் என்
விடியலுக்காக...

..........................வெற்றிவேல்


Nov 28, 2012

சொல்லித் தெரிவதில்லையடி




சொல்லித் தெரிவதில்லையடி
நான் உன்
மீது கொண்ட நேசம்!

என்னிடம் கூறிவிட்டு,
அனுமதித்த பிறகா, நீ
என்னுள் வந்தாய்!

இல்லையே! நான்
அறியாமல் என்னுள் நுழைந்தாய்!
உறக்கத்தை களைத்தாய்!
நினைவினை சிதறடித்தாய்!
கனவின் முழு நாயகியும் ஆனாள்!!!

அன்பில் உருக வைத்தாய்!
ஏக்கத்தில் சிதற வைத்தாய்!
பிரிவினில் அழவும் வைத்தாய்!
இவற்றை, நீ என்
அனுமதியுடனா செய்கிறாய்!!!
இல்லையே!

நானும் சொல்லப் போவதில்லை!
என் அன்பை, நேசத்தை, காதலை
உன்னிடம்...

என்னைப்போல் நீயாக
எப்போது அன்பை
உணருவாய் என்று பார்க்கலாம்!

அதுவரையில் சொல்லப் போவதில்லை
நான், உன்னிடம் என் அன்பை...
காலம் தாழ்த்தி
கானல் கனவில் கரையுமுன்
சொல்லிவிடு என்னிடம்...
என் அன்பே!!!

சொல்லித் தெரிவதில்லையடி!
என் காதல் உன்னிடம்.
சொல்லித் தெரிவதில்லையடி...!!!

Nov 25, 2012

களவாடப் படும் கனவுகள்


தினமும் வந்துவிடுகிறாள்
என்னுள், தவறாமல்
கனவுப் பொழுதிலும்,
நினைவுப் பொழுதிலும்...

வரும் வேளையில்
என் தேவதை
அழகுடன் உலாவுகிறாள்...

எங்கும் வருகிறாள்...
அவளாகவே கொஞ்சுகிறாள்,
மகிழ்ச்சியின் எல்லைக்கும்
கூட்டிச் செல்லுகிறாள்...

கரம் பிடித்து நடக்கிறாள்,
செல்ல சண்டையிடுகிறாள்,
காதோடு காதாய் ரகசியம் பேசுகிறாள்
என்னுள் நித்தமும், எனக்கு
மட்டும் கேட்பதுபோல்...

அத்தனையும் கொடுத்துவிட்டு
செல்லும் வேளையில் மட்டும்,
மறக்காமல் என் உறக்கத்தையும்,
கனவையும் அவளுடன்
களவாடிவிட்டுச் சென்றுவிடுகிறாள்...

கனவுடன், என்னையும் களவாடுவாள்
என்ற எதிர் பார்ப்பில்
களவாடப்பட  காத்திருக்கிறேன்
அவள் வருகைக்காய்
 அடுத்த நாளும்...!!!

.................................வெற்றிவேல்...



Nov 21, 2012

உயிர் முடிச்சு

உயிரில் எங்கேயோ
போட்டுக்கொண்ட முடிச்சு!
நட்பாய், காதலாய்!

நீ போட்ட முடிச்சா? இல்லை
நான் போட்ட முடிச்சா? இல்லை
நாம் நமக்காக போட்டுக் கொண்ட
முடிச்சா இது!!!

முடிச்சின் இரு துருவங்களாய்
நாம்! முன் பாதி நீ!
பின் பாதி நான்?

நெருங்கி வந்து உன்னுடன்
தொடரலாம்
என்றாலும், விலகிச் சென்றே
உயிரைக் குடிக்கிறாய்!!

அவிழ்த்துக்கொள்ள ஆசைப் பட்டு
விலகினாலும்
முடிச்சை இறுக்கி
உயிரை வாங்க விழைகிறாய்!

இருவரும் விலக முற்ப்பட
நம் நட்பு மட்டும்
முடிச்சில் மரணிக்க
எத்தனிக்கிறது நமக்காய்...

........................................வெற்றிவேல்...



Nov 17, 2012

கேள்விகளால் ஆனவள் ! கேள்வியாய் ஆனவள் !

வெறுமையாய் இருந்த என்
மனக் காகிதம் ...

கிறுக்கக் கூடத் தெரியாமல்
இருந்த நான்...

அழகாய் உள்நுழைந்தவள்
உயிரோவியமாய் ஆகிவிட்டாய்...

சில நேரம் அழகிய கவிதைகளாய்,
மனம் வருடும் ஓவியமாய்,
கடந்து செல்லும் கனவுகளாய்..

எப்படி நான் வரைந்தாலும் முடிவில்
மட்டும் தவறாமல் வந்து
நனைத்து விட்டுச்
செல்லும் மனச் சாரலாய் நீ ...

என் மன ஏட்டில் நான் வரையும்
எழுத்து, சொல்,
தொடர் புள்ளி, கார்ப் புள்ளி,
தவறாமல் வந்து முடித்து வைக்கும்'
முற்றுப் புள்ளி...
யாவும் நீயே!!!

காரணமில்லாமல் தோன்றும்
ஆச்சர்யம், வியப்பு, மகிழ்ச்சி
என நான் உணரும்
யாவும் நீயே...

ஆனால்  முடிவில் மட்டும்
தவறாமல்
கேள்விக் குறியாய் மட்டும்
நின்று கொள்கிறாய் என்னுள்...

விடையாய்  வரும் காலம் எப்போது???


Nov 13, 2012

இன்று எனக்கு தீபாவளி தானா?

காலையில் எழுந்தாள்
மேகம் கரைத்த மழையைக் கொண்டு
நீராடினாள்- என்
அழகு தேவதை...

வைகறையில் திரண்டிருந்த
இருட்டு அனைத்தையும் சுருட்டி
உடையாக்கிக் கொண்டு
கதிரவனுக்கும் வழிவிட்டாள்...

கரும் மேகங்களுக்கிடையில்
தோன்றிய மின்னலைக் கொண்டு
தலையைத் துவட்டி
சிண்டு போட்டுக் கொண்டாள்...


நிலவின் முதுகைச் சுரண்டி
முகத்தில் பூசிக் கொண்டாள்
என் தேவதை...

கீழை வானில் தோன்றிய
விடிவெள்ளியை எடுத்து தன்
நெற்றியிலும் இட்டுக்கொண்டாள்...


என் கனவில் இவளைப் பார்த்த
என் விழிகளைப் பறித்து- நான்
காணும் இருளைக் குழைத்து
கண் மை பூசிக் கொண்டாள்...

இப்படி செய்த இவள் இன்று
முழு தேவதையாக- முழுமதியாகி
என் வானில் உலாவுகிறாள்...

இவளே இன்று என் வானில்
முழு நிலவாக உலாவ- எனக்கு
எப்படி இன்று தீபாவளி?

தீபாவளி-- இது நிலவற்ற
அமாவாசையில் கொண்டாடும்
தீபத் திருநாள் அல்லவா!!!

நான் என்று கொண்டாடுவது?

..................................................வெற்றிவேல்...


Nov 2, 2012

நீ, நான்

உறக்கத்தில் நான்
       அதில் தோன்றும் கனவெல்லாம் நீ!!!

முகம் பார்க்கும் நான்
       அதில் தோன்றும் பிம்பமாய் நீ!!!

இரவெல்லாம் நான்
       அதன் உறக்கமெல்லாம் நீ!!!

வெளிச்சத்தில் நான்
       அதன் நிழலெல்லாம் நீ!!!

மழையில் நனையும் நான்
       என்னை நனைக்கும் மழையாய் நீ!!!

தாகத்தில் நான்
      தூரத் தெரியும் கானல் நீராய் நீ!!!

தூரப் பறக்கும் பறவையாய் நான்
       நான் துரத்தும் வான் முகிலாய் நீ!!!

கார் மேகமாய் நான்
       என்னைக் கிழிக்கும் மாய மோகினியாய் நீ!!!

காண்பதெல்லாம் நான்
      காணும் காட்சியெல்லாம் நீ!!!

வாழ்வதெல்லாம் நான்
     என்னை வாட்டும் துயரமெல்லாம் நீ!!!

தொலைந்து போன நான்
     தூரத் தெரியும் விளக்காய் நீ!!!

உடலாய் நான்
     என்னுள் ஓடும் உயிராய் நீ!!!

............................................................................வெற்றிவேல்


Oct 30, 2012

என் வான் நிலவு

நண்பர் சிகரம் பாரதியின் கவிதை இது, மிகவும் பிடித்தது. சில மாற்றத்துடன் இங்கு பதிகிறேன்...

என் வானில்
என்னை நனைத்த படி
என்னுடன் ஓராயிரம் நட்சத்திரங்கள்..


என் வானில்
நிலவு கூட
நிலையாக இருப்பதில்லை...

அடிக்கடி
தன் உருவத்தை
மாற்றி மாற்றிக் காட்டி
என்னை ஏய்க்கின்றது...

கற்பனைகளில் கூட
கண்கட்டி வித்தை
காட்டுகின்றது...

அது போலத்தான்
அழுகையும் சிரிப்பும்
அவ்வப்போது
என்னுள் மாறி மாறி
வருகின்றன...

அடிக்கடி
நட்சத்திரங்களின்
நவரசம் காட்டி
மின்னி மறையும்
நிலவுகளாய்.

என்னுடைய
உறங்கும் இரவுகளில்
கை விளக்குகளுடன்
நிலவொளியில்
ஆடிப்பாடியபடி பலர்...

அவர்களின் கை
விளக்குகளைப்
போன்றவைதான்
எனது நிலவுகளும்...

என் அனுமதியின்றியே
களவாடப்படும் சில!
மறைந்து போகும் சில!

ஒன்றல்ல இரண்டல்ல
என் கற்பனை
வானத்தில்
ஆயிரமாயிரம் நிலவுகள்
உலாப் போகின்றன 
சில சமயங்களில்......

இல்லை
அடிக்கடி அவற்றுள்
சில நிலவுகள்
உதிர்ந்து விடுகின்றன
நீர்த்து போன
நட்சத்திரங்களைப் போல.....

இன்னும் சில நிலவுகள்
மின்னி மின்னி
மறைவதும் ஒளிர்வதுமாய்
விளையாட்டுக் காட்டுகின்றன
என்தன் வானில்...

உதிர்ந்த நட்சத்திரங்களும்,
உதிரும் நட்சத்திரங்களும்
மீண்டும் ஒளிரும் என்ற நம்பிக்கையில் நான்...


சிகரம் பாரதியின் இக்கவிதை இலங்கையின் நாளிதழான "தினகரன்" வெளியானது...

நன்றி:

சிகரம் பாரதி

Oct 22, 2012

அழகான ஆண்கள்: சத்தியமா நான் மனிதர்களைப் பற்றி சொல்லுலீங்க

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம், தங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துகள்... கல்விச் செல்வமும், பொருள் செல்வமும் பெருகட்டும் அனைவருக்கும்...

சமீபத்தில் நான் முகப்புத்தகத்தில் படித்த ஓர் பொன் மொழி...

உலகில் உள்ள ஆண் இனம் அனைத்துமே அழகானதுதான். ஆனால் இந்த மனித இனத்தைத் தவிர...
                                                             
 -------------- மேற்க்கத்தியப் பழமொழி---------------

அது எந்த அளவிற்கு உண்மை என நான் தேடிய போது கிடைத்த சில நிழற்ப் படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

பார்த்து எப்படி உள்ளது என்று கமெண்டில் சொல்லிட்டுப் போங்க...

Oct 14, 2012

என்தன் இறைவா! இது நியாயமா?

என்தன் இறைவா
நான் வணங்கும் ஈசா!!!
எனக்கும் அருள்புரியேன்...

அன்று பரவையிடம்
இருமுறை தூது சென்றாய்
சுந்தரனுக்காக.
அவன் காதலை அவளிடம் உரைக்க.

எனக்கும் தூது செல்லேன்
ஒரே ஒரு முறை.



உன் நெற்றிக் கண்ணில் வெந்தால்
என் உயிர் ஒரு முறை மட்டுமே போகும் -ஆனால்
இவளின் அழகிய தண்பார்வைத் தீயில்
என் உயிர் நித்தமும் எரிந்து
அது என் உடலையும் வாட்டுகிறதே!!!
அவள் நினைவே மீண்டும்
உயிரையும்
கொடுத்துவிடுகிறதே...

நினைவில் இருக்கையில் கண்களில்
மின்னலென பாய்கிறாள்....
கனவிலும் அழகிய ராட்சசியாய்
முன் வந்து கனவையும் அவளே பறித்துக் கொள்கிறாள்...

நினைவு, தூக்கம் இரண்டிலும்
அவளே சங்கமித்து என்னுள்
என்னை விரட்டி ஓயாது திரிகிறாள்
என் மனத் தீயில்.

என் இறைவா அவளிடம் சென்று கூறேன்,
இப்படியே சென்றால்
என் உயிர் எனைப் பிரிந்து
உனையும் சேராமல்
அவளிடம் தஞ்சமடைந்து விடும்
என்பதை ஒரு முறைக் கூறேன்.

காலம் கடந்து போகுமுன்னே
ஞாலம் விட்டுப் பிரியுமுன்னே
அவள் நினைவில் நான் வாடுவதை
அவளிடம் சொல்லி
எனை வந்து சேரச் சொல்லேன்.
என்தன் இறைவா.

எனக்காக செல்லேன் அவளிடம்.
என் அன்பை அவளிடம் கூறி ஏற்கச் சொல்லேன்.
நீ மட்டும் ஏற்கச் செய்தால்
நான்  விரதம் இருந்து விளக்கேற்றி
தேங்காய் உடைப்பேனே, அவளுடன்!!!
என்தன் அன்பைக் கூறிவிடேன்...

உன் பக்தன் என்னை வாடச் செய்து
நீ மட்டும் உன் தேவியுடன் நித்தமும்
மகிழ்ச்சியில் திளைக்கிறாயே?
இது நியாயமா! நீயே கூறேன்...

........................................................வெற்றிவேல்


Oct 7, 2012

எதிர்கால நினைவுகள்

அது ஒரு மாலைப் பொழுது, நானும் என்னவளும் எங்கள் ஊர் அழகிய நீரோடையில் காலாற நடந்து  உலாவிக் கொண்டிருந்த நேரம், மாலையில் சிறு உலா தான் அது. எந்தன் கையைப்பிடித்த படியே என்னுடன் பல கதைகள் பேசி நடந்து கொண்டே வந்தாள் என்தன் தோழி. மாலையில் நடந்த அந்த இரவுக்கும் வெளிச்சத்திற்கும் நடந்த அழகிய போராட்டத்தை ரசித்த படியே இருவரும் வீடு நோக்கி நடந்தோம். அந்த மாலைப் பொழுதின் ரம்யம் எங்களை அப்படியே கட்டி வைத்தது. அப்படியே என்னுடன் வந்த என்தன் அழகு ராட்சசியும் என்னை அவளது கரங்களால் சேர்த்து என் கரங்கள் வழியாக  என்னைக் கட்டிக் கொண்டாள்.

Sep 30, 2012

மனித மூளையும் இரண்டு திருடர்களும்: ஓர் அசாத்திய தகவல்

மனித மூளை பற்றி நாம் அறிவதெல்லாம் உலகிலேய மிகவும் சிக்கலான ஓர் அசாத்தியமான அமைப்பு. அது நமது நரம்பு மணடலத்தின் தலைமை கட்டுப் பாட்டு அமைப்பு என்றும் அதுதான் நமது உடலை கட்டுப் படுத்துகிறது என்றும் அறிவோம். (இதனை ஆங்கிலத்தில் The brain is the part of the central nervous system located in the skull. It controls the mental processes and physical actions of a human being.) ஆனால் இன்னும் நமக்கு நமது மனித மூளை பற்றி தெரியாத தகவல்கள் என்பதைவிட, அறியாத தகவல்கள் ஒன்று உண்டு என்றும் கூறலாம்.

கேட்டால்  சிறு அதிர்ச்சி ஏற்படும் என நினைக்கிறேன்.

Sep 19, 2012

புள்ளையார் அதிர்ஷ்ட்டமும், தென்னகத்தில் அவர் வேரூன்றிய விதமும்

நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். இந்த நல் நாளில் நாம் விநாயகரையும் அவர் தென்னகத்தில் வேரூன்றிய விதத்தையும் சிறிது அலசலாம் என்று நினைக்கிறேன்....

அனைவரும் சிறிது சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சரியாக கி.பி.624 ஆம் ஆண்டிற்கு செல்லுங்கள், ஏனெனில் அப்போதுதான் நம்மால் சரியாக அறிந்துகொள்ள இயலும்.