அன்புள்ள ராட்சசிக்கு,
பார்க்கும் பார்வையில் மட்டும் என்னுள், என் ஐம்புலனில் தீயை விதைத்துவிட்டு என்னை தூரமாக தள்ளி வைத்து ஏதும் அறியாதவள் போல் என்னை ரசித்துக் கொண்டிருப்பவளுக்கு நான் எழுதும் என் காதல் கடிதம்...
முதலில் கண்டபோது தென்றலாய் என்னை வருடி, பழகும் காலத்தில் அழகுத் தூறலாக என்னை நனைத்து, என் காதலியாய் என் மனத்தைப் புயல் போல ஆட்கொண்ட என் பேரழகிக்கு...
நானாக இருந்த என் நாட்களை விட, நாமாக இருந்த என் நாட்களில் என்னுள் பல மாற்றங்களை விதைத்து விட்டுச் சென்றவளுக்கு...
உன்னுடன் காலாற நடந்தபோது வண்ணமயமான என் நிழல், நீயில்லாத என் வெற்று நடையைக் கண்டு என் நிழலும் என்னைக் கேளி பேச வைத்தவளுக்கு...
என் வாழ்வில் நான் மிகவும் கவனமாய் என் இதயக்கூட்டில் சேகரித்து வைத்திருக்கும் நினைவுகள், நாம் சந்தித்த பொழுதுகள் தானடி. ஆனால் அந்த இனிய சந்திப்புகள் மட்டும் தான் என்னை இன்னும் உயிரோட்டமாய் வைத்திருக்கிறது.
என் காதல் உனக்குத் தெரியாத நாட்களில் எல்லாம் என்னுடன் அளவாவிய நீ, ஏனோ என் எண்ணத்தைத் தெரிந்துகொண்ட பின் நான் காண இயலாத தூரத்தில் மறைந்துகொண்டு என்னை நித்தமும் வதைத்துக் கொண்டிருப்பவளுக்கு...
என் கனவு மற்றும் என் எண்ணங்கள் என அனைத்தையும் களவாடி என் உறக்கத்தோடு என்னையும் சேர்த்து நீயே என்னையும் களவாடுவாய் என்ற காத்திருப்பில் நானடி...
இப்போது என் மனம் உன்னை நினைத்தே என் உயிர் வேகுவது போல், உன் மடியில் என் உயிர் பிரிந்து, உன் பைந்தமிழ் அழுகுரல் கேட்டே என் உடல் வேகும் இந்த வரத்தை மட்டுமாவது எனக்கு அளித்துவிடேனடி என் செல்ல ராட்சசியே!!!
அன்புடன்
வெற்றிவேல்...
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இது போட்டிக்காக மட்டுமே எழுதப்பட்டது, எழுதியது அனைத்தும் கற்பனையே. ஆரம்பத்தில் எளிதாக எழுதிவிடலாம் என்று ஒப்புக்கொண்டேன், ஆனால் எழுத ஆரம்பித்த பின்பே அதன் கடினம் புரிந்தது. நல்ல, யாராலும் எளிதில் ஒப்புக்கொள்ள இயலாத தலைப்பைத் தான் நண்பர் சீனு வழங்கியுள்ளார். அவரது முயற்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல நண்பர்கள் எழுதுபவர்களை ஊக்குவிக்குமாறு பல போட்டிகளை நடத்த முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....
எப்படியோ என்னையும் காதல் கடிதம் ஒருவர் எழுதவைத்துவிட்டார்.... நன்றிகள் பல...