![](http://lh3.ggpht.com/_fpi3sxLoyoI/Sl2jQYT01VI/AAAAAAAAC5c/iaY-UPpJqk8/peacock-kolam_thumb.jpg)
மார்கழிப் பொழுதின்
மயக்கும் காலை.
வங்கக் கடலின் ஈரம் சேர்த்த
மாயக் குளிர் காற்று.
ஊடலுடன் காதோடு காதாய்
ரகசியம்
பேசும் குருவிகள். தவழ்ந்து
வரும் குளிர் காற்றோ
பனியைத் தழுவியபடி
ஈர இலைகளுடன் நடனமாட...
நீயிடும் புள்ளிக் கோலத்தில்
தொலையத்
தொடங்கும் நட்சத்திரங்கள்...
கனவுகள் நனவாகாதா என்ற நிலை
சென்று, நடந்தவை அனைத்தும்
கனவாகாதா என்ற நிலையில்
ஏங்கித் தவிக்கும் மனம்...
நீ இல்லாத வானில்
பார்வையிழந்த நான் இங்கு
தனியாக காத்திருக்கிறேன்
விடியப்
போகும் என்
விடியலுக்காக...
..........................வெற்றிவேல்