Jan 22, 2016

திறந்த மடல் - 2: கடிதங்களின் சுவாரஸ்யங்கள்

அன்புள்ள தோழர் சீனு அவர்களுக்கு,

வணக்கம்...

நான் நலமாகவே இருக்கிறேன். தாங்களும் நலமாக இருக்கிறீர்கள் எனும் நம்பிக்கையில் கடிதத்தைத் தொடர்கிறேன்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பே எழுத நினைத்த கடிதம் இது. கடந்த வருடம் எழுதிய எனது முதல் கடிதம் சென்னை வெள்ளத்தில் சிக்கி சிதைந்ததைப் போல அல்லாமல், இந்தக் கடிதத்தைக் காப்பாற்றவே சற்றுப் பொறுத்து பொங்கல் களிப்பு அடங்கியபிறகு எழுதுகிறேன்.

Jan 19, 2016

உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்


என் தேடல்
உனக்காகத்தான்...
என் பயணம்
உனக்காகத்தான்...
என் இலக்கும்
உனக்காகத்தான்...

யுகம் யுகங்களாக இறந்து
மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டிருக்கிறேன்
உனக்காக...

இருவரும் சந்திக்கும்போது
காதல் மொழி வேண்டாம்...
விழிகள் இணைந்து
நேரத்தைக் கடக்க வேண்டாம்..
உதட்டோரம் சிறு சிரிப்பு,
கடைக்கண் பார்வை என
எதுவும் தேவையில்லை...

பெருஞ்சிந்தனையில் பேனாவைக் கடிக்கும்
சமயத்திலோ...
உறக்கம் வராமல் புரண்டு படுக்கும்
பொழுதிலோ – அல்லது
தனிமையை விரும்பி
அமர்ந்திருக்கும் காலத்திலோ
என் நினைப்பு உன்னுள் தோன்றி
மறைந்தால் போதும்...

உனக்கும் சேர்த்து
நான் ஒருவன் காதல் செய்வேன்...


சி.வெற்றிவேல்...

சாளையக்குறிச்சி

Jan 17, 2016

பயணங்கள் முடிவதில்லை...

தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அக்கா'வின் பயணம் குறித்த கேள்விகளுக்கு பதில்கள்...
1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
இரயில் பயணம் என்றாலே ஏனோ எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. பெரும்பாலும் இரயில் பயணங்களை தவிர்த்து பேருந்தில் தான் பயணம் செய்வேன். இரயிலில் பயணம் செய்வது பேரின்பம் தான். ஆனால், சிக்னல்களில் நிற்கும் சில நிமிடங்கள் எனக்கு பல மணி நேரங்களாக நீண்டு என்னை வதைப்பதுண்டு. எனக்கு எப்போதுமே காத்திருக்கப் பிடிக்காது. குறிப்பாக இரயில் மற்றும் பேருந்திற்காக. ஓரிடத்தில் நிற்காமல் எப்போதுமே நகர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இந்த வகையில் தவிர்க்க முடியாத சமயங்களில் மட்டுமே இரயில் பயணத்தைத் தேர்ந்தெடுப்பேன். எனக்கு நினைவில் தெரிந்த முதல் இரயில் பயணம் கல்லூரி காலத்தில்  பள்ளித் தோழியுடன் திருச்சியிலிருந்து அரியலூர் வந்த பயணம் தான். அதிலும் தோழியின் தம்பியும் உடன் வந்ததாலோ  என்னமோ அந்தப் பயணம் பெரிய அளவில் குதூகலத்தை ஏற்படுத்தவில்லை.

Jan 8, 2016

பெற்றோர்களுக்காக...

நெடுநாட்களாகவே எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டிருப்பது. தெய்வலோகத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் தேவதைகளும், தேவர்களும் வழி தவறி பூமியில் பிறந்த குழந்தைகளைத் தான் நாம் ‘ஆட்டிசம்’ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்கிறோமோ என்ற எண்ண மயக்கம் எனக்கு எப்போதுமே இருக்கிறது. ஏனெனில், வானுலக தேவர்களும், தேவதைகளும் எந்தவித கவலைகளும் இல்லாமல் மற்றவர் துன்பத்தில் மகிழாமல் நிறைவுடன் இருப்பார்கள் என்று நிறைய கதைகளில் கேட்டிருக்கிறேன். அவர்களைப் போன்றவர்களே இந்தக் குழந்தைகளும் என்பது என் எண்ணம். ஏனெனில், இக்குழந்தைகள் எந்தவித கவலைகளும் இல்லாமல், இந்த அவசர இயந்திர உலகில் தங்களைச் சிறைவைத்துக் கொள்ளாமல் அவர்களுக்கென்று ஒரு தனி உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்கு வருத்தம் என்பதே கிடையாது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றியும் கவலைப்பட வேண்டியதும் இல்லை.